Saturday 22 August 2015

பூமாலை


மலையத்தேவன் மகளே,
மதுரைநகர் அரசியே,
மாடவீதிகளில் உலாவரும்
மலை மகளே!

நான் தொடுக்கும்,
ஆயிரம் ஆயிரம்
ஆரங்களால் உன்னை
அலங்காரம் செய்கின்றனரே,

உனது அடியிலே
வளர்ந்து நிற்கும்
வனிதை என்
வீதி நீ அறிவாயோ?

வேண்டும் வரம் தருபவளே,
ஒரு பூமாலை தந்திடம்மா - என்
உள்ளங்கவர் மணாளன் கைகளால்

எனக்கு ஒரு பூமாலை தந்திடம்மா!

உழவன்



உழுது உழுது
வளைந்த முதுகு,
வெய்யிலைக் கண்டு
வாடி வியர்த்தாலும்
ஒய்வு தேடாது
உழைக்கும் கைகள்,
கல், மண், முள் என எதைக்
கண்டும் பணியாத பாதங்கள்,
வானம்பார்த்த பூமியில்
வியர்வை பாய்ச்சி,
வாழ்நாள் முழுதும்
வயல்வெளியில் வாசம் செய்து,
நெல்மணிப் பார்க்கையில்
நெஞ்சில் நிம்மதிப் பெருமூச்சு
அறுவடைப் பார்த்தாச்சு.
ஆனாலும் உழவன் வீட்டு
அடுக்களையில்
அரிசிப் பானையில்,
பஞ்சம் தீரலையே

பிள்ளைகள் பசியாரலையே!

எள்ளல்



கொக்கரித்த சிரிப்பால்
காப்பியங்கள் பிறந்துள்ளன
எத்தனைக் காலங்கள் உருண்டாலும்,
எள்ளி நகையாடிய தருணங்கள்
எள்ளளவும் மனதினின்று நகராது.

அவையடக்கத்துள் நகைச்சுவைக்கும்
அகராதிகள் உண்டு.
அளவு மீறுகின்ற போது
அணை உடைவது போல,
அலட்சியச் சிரிப்பால்
அவலட்சணமாகிப் போகும்
அகங்கள் பல உண்டு.

எல்லை தாண்டா எள்ளல்

எண்சுவைகளில் அழகே!

Tuesday 18 August 2015

அத்தை மடி



அதிமதுரப் பூவழகே - நீ
அழுததாலே மேற்கே
அந்தவானமும் அழுகுதே,
அந்திச்சூரியனும் மயங்குதே,
அம்மலையரசி தாங்காமல் - கண்
அருவி நீர் சொரியுதே,
அரும்பு மலரே
அழுதது போதுமடி,
அத்தைமடி வந்திடடி - உன்னை
அரவணைத்துத் தாலாட்ட

ஆயிரம் பிறப்புப் போதாதடி.

Saturday 15 August 2015

சித்தாந்தம்


சிந்தை முழுதும்
சிவமே நினைவாய்,
சீவனை மறந்து
சிற்றம்பலவானை நினைக்கும்     
சிந்தைப் பொழுதெல்லாம்
சிறுதுளி தேன் பருகிய  
செம்மை உணர்வுப்பிறக்கையில்,
சித்தாந்தத் தேனடையாம்
சாகரத்தின் சாராம்சத்தை

சொல்லிடவும் முடியுமோ?

ஆருயிர் - நெல்


கன்ம முளை  காரணமாய்,
ஆணவ  உமியகற்றும்
மாயைத் தவிடுடைத்து
ஆருயிர் நெல்.
 ஆக்கி, அளித்து,
அழிப்பவன் அவனன்றோ!

ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்று தடைகளையும் உவமைப்படுத்தி உரைக்க விழைகின்றேன்.

ஓர் நெல் உயிராகக் கருதப்படின், அந்நெல்லைச் சுற்றி முழுவதும் மூடி இருக்கும் உமி ஆணவம். நெல் தோன்றக் காரணமான முளை தான் கன்மம். அதாவது வினைப்பயன்.

மாயை என்னும் தவிடுடைத்து என்பதில், உமியை அகற்றி நெல்லைப் பிரித்தெடுக்கும் தவிடு போன்று உயிருக்கு பிறப்பென்னும் மாயை தோன்றுகிறது. ஏனெனில் உடலுடன் கூடி உயிர் பிறப்பெடுத்தால் தான், மெல்ல மெல்ல தன் வினைப் பயன் உணர்ந்து, ஆணவம் அழித்து ஆருயிரானது தனியாக வெளிப்பட்டு ஆண்டவனை அடைய இயலும்.


ஓர் உயிரை ஆக்கி, அதாவது படைத்து, வினை முதலான பயன்களை அடையச் செய்து, ஆணவம் அழித்து உயிரை நல்வழிப் படுத்தும் தொழிலான் இறைவனே.

இறைமை


ஓங்கராப் பொருளே
வினைதீர்க்கும் வித்தகனே,
வெற்றிதரும் விநாயகனே
போற்றி போற்றி!

இம்மைப் பொருளின்பமும்
மறுமை முத்தியின்பமும் தரும்
மங்கல இலக்குமியே,
மன்னுக நின்புகழ்!

நாவிற்கு உகந்த
நற்றுணை யாகும்
நற்றாய் சரசுவதியே,

நமோ நமக!