Saturday, 22 August 2015

பூமாலை


மலையத்தேவன் மகளே,
மதுரைநகர் அரசியே,
மாடவீதிகளில் உலாவரும்
மலை மகளே!

நான் தொடுக்கும்,
ஆயிரம் ஆயிரம்
ஆரங்களால் உன்னை
அலங்காரம் செய்கின்றனரே,

உனது அடியிலே
வளர்ந்து நிற்கும்
வனிதை என்
வீதி நீ அறிவாயோ?

வேண்டும் வரம் தருபவளே,
ஒரு பூமாலை தந்திடம்மா - என்
உள்ளங்கவர் மணாளன் கைகளால்

எனக்கு ஒரு பூமாலை தந்திடம்மா!

உழவன்



உழுது உழுது
வளைந்த முதுகு,
வெய்யிலைக் கண்டு
வாடி வியர்த்தாலும்
ஒய்வு தேடாது
உழைக்கும் கைகள்,
கல், மண், முள் என எதைக்
கண்டும் பணியாத பாதங்கள்,
வானம்பார்த்த பூமியில்
வியர்வை பாய்ச்சி,
வாழ்நாள் முழுதும்
வயல்வெளியில் வாசம் செய்து,
நெல்மணிப் பார்க்கையில்
நெஞ்சில் நிம்மதிப் பெருமூச்சு
அறுவடைப் பார்த்தாச்சு.
ஆனாலும் உழவன் வீட்டு
அடுக்களையில்
அரிசிப் பானையில்,
பஞ்சம் தீரலையே

பிள்ளைகள் பசியாரலையே!

எள்ளல்



கொக்கரித்த சிரிப்பால்
காப்பியங்கள் பிறந்துள்ளன
எத்தனைக் காலங்கள் உருண்டாலும்,
எள்ளி நகையாடிய தருணங்கள்
எள்ளளவும் மனதினின்று நகராது.

அவையடக்கத்துள் நகைச்சுவைக்கும்
அகராதிகள் உண்டு.
அளவு மீறுகின்ற போது
அணை உடைவது போல,
அலட்சியச் சிரிப்பால்
அவலட்சணமாகிப் போகும்
அகங்கள் பல உண்டு.

எல்லை தாண்டா எள்ளல்

எண்சுவைகளில் அழகே!

Tuesday, 18 August 2015

அத்தை மடி



அதிமதுரப் பூவழகே - நீ
அழுததாலே மேற்கே
அந்தவானமும் அழுகுதே,
அந்திச்சூரியனும் மயங்குதே,
அம்மலையரசி தாங்காமல் - கண்
அருவி நீர் சொரியுதே,
அரும்பு மலரே
அழுதது போதுமடி,
அத்தைமடி வந்திடடி - உன்னை
அரவணைத்துத் தாலாட்ட

ஆயிரம் பிறப்புப் போதாதடி.

Saturday, 15 August 2015

சித்தாந்தம்


சிந்தை முழுதும்
சிவமே நினைவாய்,
சீவனை மறந்து
சிற்றம்பலவானை நினைக்கும்     
சிந்தைப் பொழுதெல்லாம்
சிறுதுளி தேன் பருகிய  
செம்மை உணர்வுப்பிறக்கையில்,
சித்தாந்தத் தேனடையாம்
சாகரத்தின் சாராம்சத்தை

சொல்லிடவும் முடியுமோ?

ஆருயிர் - நெல்


கன்ம முளை  காரணமாய்,
ஆணவ  உமியகற்றும்
மாயைத் தவிடுடைத்து
ஆருயிர் நெல்.
 ஆக்கி, அளித்து,
அழிப்பவன் அவனன்றோ!

ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்று தடைகளையும் உவமைப்படுத்தி உரைக்க விழைகின்றேன்.

ஓர் நெல் உயிராகக் கருதப்படின், அந்நெல்லைச் சுற்றி முழுவதும் மூடி இருக்கும் உமி ஆணவம். நெல் தோன்றக் காரணமான முளை தான் கன்மம். அதாவது வினைப்பயன்.

மாயை என்னும் தவிடுடைத்து என்பதில், உமியை அகற்றி நெல்லைப் பிரித்தெடுக்கும் தவிடு போன்று உயிருக்கு பிறப்பென்னும் மாயை தோன்றுகிறது. ஏனெனில் உடலுடன் கூடி உயிர் பிறப்பெடுத்தால் தான், மெல்ல மெல்ல தன் வினைப் பயன் உணர்ந்து, ஆணவம் அழித்து ஆருயிரானது தனியாக வெளிப்பட்டு ஆண்டவனை அடைய இயலும்.


ஓர் உயிரை ஆக்கி, அதாவது படைத்து, வினை முதலான பயன்களை அடையச் செய்து, ஆணவம் அழித்து உயிரை நல்வழிப் படுத்தும் தொழிலான் இறைவனே.

இறைமை


ஓங்கராப் பொருளே
வினைதீர்க்கும் வித்தகனே,
வெற்றிதரும் விநாயகனே
போற்றி போற்றி!

இம்மைப் பொருளின்பமும்
மறுமை முத்தியின்பமும் தரும்
மங்கல இலக்குமியே,
மன்னுக நின்புகழ்!

நாவிற்கு உகந்த
நற்றுணை யாகும்
நற்றாய் சரசுவதியே,

நமோ நமக!

Saturday, 8 August 2015

தகப்பன்சாமி



என் அடையாளம் அவன் .
கல்விக் கரை சேர
கால்கள் எனும் துடுப்பெய்தியவன்.
துடுப்பில்லா படகு
தத்தளித்தல்லவா போகும்?
என்னை
தளராது தாங்கியவன்.

.வே.சா தாத்தாப் போல்
ஓடி ஓடித் தேடினான்
உன்னத நூல்களை.
தொகுத்து வைத்துள்ளேன்
நினைவுகளாய் நூல்களையும், அவனையும்,
கை ஒடிந்து விட்டதுஆமாம்!

தன்னம்பிக்கை ஒடிந்துவிட்டது.
தகப்பன் என்ற ஒருவன்
கோட்டை போன்ற காப்பு.
தகர்ந்தது நீ மட்டுமல்ல - என்
துணிவும் தான் .
தாயைப்போல
அவனது அன்பும்
ஆழம் தான்.

மூடிய சிப்பிக்குள்
முத்துப் போல.
நீ தந்த அறிவை
தொலைக்க விரும்பவில்லை
தூசு தட்டுகிறேன்.
என் தகப்பனே - இல்லை
என் தைரியமே,
துணையாக என்றும்
நீ இருப்பாய் என்று
திடமாக நம்புகின்றேன்

 துணிவே துணை.

தாய்மை


உதிரம் பிரித்து
உயிர்ப்பால் கொடுத்து,
ஒரு கணம் பிரியாது
உடற்சூட்டோடு அணைத்து
வாஞ்சையாய் வளர்த்த பிள்ளை,
வாலிபம் தொட்ட பின் - அமில
வார்த்தைகள் கொட்டினாலும்,
வெறுத்து ஒதுக்கினாலும்,
கடிந்து பேசிடாத - அவள்
கருணைக்கு ஈடு உண்டா?

கடைமணித்துளியிலும் அவள்
கண்கள் நம்மைத் தேடும்.
காலம் சென்ற பின்னும்

காக்கும் குலதெய்வம் அவள்.

அகவை அறுபது




எனக்கு எல்லாம் தெரியும்.
நான் வாழ்ந்த அனுபவம்
உன் வயசு - கேளு 
நான் சொல்றதைக் கேளு,
     ஆமாம்! (மற்றவர்களிடத்தில்)

எதுவும் புரியலையே,
எல்லாம் மறக்குது .
கண்ணும் மங்குது .
நாலடி நடந்தா - காலு
நாள் முழுதும் வலிக்குது.

நாராயணா! (மனதில்

போர்க்களம்



தாயின் கருவறையை அடைவது முதலாய், பூமித்தாயின் மடியில் முடிவது வரை போர்க்களம் தான் ஒவ்வொருவருக்கும். அழுது புரண்டு போராடினால் தான் பச்சிளம் பிள்ளைக்கு பால் புகட்ட ஓடி வருவர். அப்பிள்ளை தவழ்ந்து, நடந்து, ஓடுவதற்கும், தவறி விழும் ஒவ்வொரு தருணத்திலும் போராட வேண்டும். போராட சோர்ந்தால் அடுத்தடுத்த படிநிலைகள் இல்லை.

பேச, எழுத என வளரும் ஒவ்வொரு நிலைகளில் போராட வேண்டும். அலுவல் தேடி அலுவலங்களில் போராட வேண்டும். ஒருவேளை அவனது ஆசைகள் தான் போராட்டத்திற்கு காரணம் என்றால், முற்றும் துறந்த முனிவர், இறையை அடைய போராடத்தான் செய்கிறார். ஒவ்வொரு மனிதனும் தனக்கான எண்ணத்திற்காக போராடுதல் தவறு இல்லையே.

பாசம், ஆசை, இலட்சியம் என கருதுகோள்கள் பல, கருவி ஒன்றே அது முடிவில்லாப் போராட்டம். எப்போது அது முற்றுப்பெறும்? மரணத்தின் போதும், மனிதன் அதனின்று தப்பிக்க போராடுகின்றான். அவன் போராடாத தருணம் என்று ஒன்று இல்லை. நான் போராடியது இல்லை என்று சொல்பவன் பொய்யன்.

போராடிப் பிறந்தோம்
பார்போற்ற வாழ்வோம்
பேராற்றல் கொள்வோம் - அதைப்

போராடிப் பெறுவோம்!

மழைமகள்



மின்னல் தீப ஒளியில்,
இடி மிருதங்க ஓசையில்,
காற்றின் கீதத்தில்,
மழை மகளே,
வான் மேடை மீது நீ
நர்த்தனம் புரிவதால்
நாங்கள் உயிர் வாழ்கிறோம் மகளே!
நாங்கள்
கட்டியுள்ள கட்டிடங்கள்
நனைந்து சிலிர்கின்றன மகளே,
விழும் பணக்காய்களை
விழுங்கி உயிர்வாழ்வோம் மகளே,
வேர்பாய்ந்திடாத
மண் வளம் மிக்க
செங்கல் பூமியாய்,
சீக்கிரம் மாற்றிடுவோம் மகளே
இப்போதும்
அப்போதும்
எப்போதும் நீ வா மகளே,

வருக! வருக! வருக!

Saturday, 1 August 2015

ஆலயமும் உடலும்



          உடலானது ஆன்மாவின் இருப்பிடமாக இருப்பதுடன், ஆன்மா இறைவனை அடைவதற்கும் துணைபுரிகிறது. அதே போல் உடலின் அமைப்பும் இறை சம்பந்தத்துடன் உள்ளது.

           நம்முடைய உடலில் 72000 நாடிகள் உள்ளன. இதனுள் நடுவாக உள்ள நாடியே மூலநாடியாகும். இதனை 'சுழுமுனை' என்பர். இங்கு தான் இறைவன் உறைகின்றான் என்பது சித்தர்கள் கருத்து. மேலும், உடல் அமைப்பு ஆலய அமைப்பினையும் ஒத்து உள்ளது.
    • மண்டை ஓடு - சிவலிங்கம் 
    • வயிற்றின் மேற்பகுதி - நந்தி 
    • தொப்புள் - பலிபிடம் 
    • பாதவிரல்கள் - கலசங்கள் 

ஆக, இறைவனின் ஆணைப்படி, உயிரானது உடலுடன் இணைகிறது. அவ்வுடம்பின் துணையுடன் உயிரானது, தனது ஆணவம், கன்மம், மாயை, என்ற மும்மலங்களை முழுதாய் நீக்கி, மேன்மை நிலை எனும் முத்தி நிலை அடைய உடலின் துணை அவசியமானதாகிறது.

பஞ்சபூதங்களின் பரிணாமம் உடல்





ஓர்  ஆன்மா உறைகின்ற இடம் உடல் ஆகும். அவ்வுடம்பானது ஐம்பூதங்களால்  ஆனது. அத்தகைய உடம்பு ஆன்மாவுடன் சேர்ந்திருந்தால் அன்றி தனியாக இயங்க இயலாது.


  • எலும்பு, தசை, மயிர், தோல், நரம்பு - மண்ணின் கூறுகள் 
  • சிறுநீர், இரத்தம், வியர்வை, சிலத்துமம், சுக்கிலம் - நீரின் கூறுகள் 
  • உடற்சூடு, மூளைக்கோளாறு, வெப்பம் - தீயின் கூறுகள் 
  • சுவாச காரியம் - காற்று 
  • பேச எழும் உதானன் - விபானன் 


இவ்வாறு மண், நீர், தீ, காற்று, வானம் ஆகிய பஞ்சபூதக் கூறுகளின் கட்டமைப்பு உடலாகும்.





Friday, 19 September 2014

அருட்சிறப்பு

பந்தங்களில் பிணக்குற்று,
பிறவிப் பெருங்கடலில்
பிறந் திறந்து,
புண்பட்டு அல்லலுறும்
புல்லிய பல்லுயிர்கள்
பற்றியிருக்கும் ஆணவப்
பிசாசை அடியோடு,
பிடுங்கி ஒழித்து
பித்தன் பதமடைந்து
பேரின்பத் தெள்ளமுதம்
பருகிட உற்ற,
உறுபொருள் அருளே!

அருளாளன்

ஆசு நீக்கும் ஆசானாய்,
சீலமிகு சிவஉருவாய்,
ஞாலமெங்கும் ஞான ஒளியாய்,
வியாபகமாய் விளங்கும்
அருளாளனின்,
அருட் சிறப்புரைக்க
அமுத மொழிகளை
அதரங்கள் அசைபோட,
அண்டகோடிகளி லெல்லாம்

அசைந்தாடுகிற தென்னகம்.

Sunday, 14 September 2014

ஐந்தெழுத்து ஓதும் முறை



  1. உரை 
  2. மந்தம் 
  3. மானதம் 

என்ற மூன்று முறைகள் உண்டு. 'உரை'  என்றால்  தனக்கும் பிறருக்கும் கேட்கும் படி உச்சரிப்பது. 'மந்தம்' என்றால் தனக்கு மட்டுமே கேட்குமாறு ஓதுவது. 'மானதம்' என்றால் தன் செவிக்கும் கேட்காத அளவிற்கு மனதில் வைத்து உச்சரிப்பது ஆகும். இம் மூன்று முறைகளில் 'மானதம்' என்பதே சிறந்தது.

இதனை, 'விதி எண்ணும் அஞ்செழுத்தே' என்ற சிவஞான போதச் சூத்திரமும் உணர்த்துகிறது.

நூற்றுஎட்டு முறை ஓதக் காரணம் 

நாள் ஒன்றுக்கு, சராசரி மனிதன் 21,600 தடவைகள் மூச்சு விடுகின்றான் என்பது விஞ்ஞான அடிப்படையில் கண்டறியப்பட்ட உண்மை. அதாவது பகலில் 10,800 தடவைகளும், இரவில் 10,800 தடவைகளும் மூச்சு விடுகின்றான். இவற்றில் 100ல் ஒரு பங்கு என வகுத்து 108 தடவைகள் ஐந்தெழுத்தை ஓதினால் இறையருள் வைக்கப்பெறும்.

ஆக, காலையில் 108 தடவைகளும், மாலையில் 108 தடவைகளும் ஐந்தெழுத்தை ஓதலாம். இரவுப் பொழுது உறங்குகையில், நாம் நம் நினைவு மறந்து அயர்ந்து தூங்குகின்றோம். அந்நேரத்தில் கூட இறைவனை நாம் நினையாமல் இருக்கக் கூடாது என்பதற்காகத் தான் உறங்குவதற்கு முன் ஐந்தெழுத்தை ஓதுதல் வேண்டும். இவ்வாறு காலை, மாலை என்று ஓதும் போது, நாளடைவில் அது நம்மையே காக்கும் அரனாக விளங்கும்.

இதைத் தான் அப்பரடிகளும்,

"துஞ்சிருள் காலை மாலை தொடர்ச்சியை மறந்திராதே 
அஞ்செழுத்து ஓதின் நாளும், அரனடிக்கு என்பதாகும்" என்கிறார்.

தற்போதைய நவீன காலத்திலும் அவதியாய்ப் பறக்கும் நமக்கும், ஓர் மன அமைதிக்கான இடமாக இறைநாமம் ஓதும் இவ்வேளைகளை ஒதுக்குவோம், இறையுணர்வைப் பெறுவோம்.

பஞ்சாட்சரம்



பஞ்சாட்சரம் என்றால் ஐந்தெழுத்து. அது என்ன உடலுக்குப் பயனாகும் பஞ்சாட்சரம் ? உயிருக்குப் பயனாகும் பஞ்சாட்சரம் ? இரண்டிற்கும் வேறுபாடு உண்டா என்றால் நிச்சயமாக உண்டு.

பஞ்சாட்சரம் வகைகள்:

  • தூல மந்திரம் - நவசிவாய (பருநிலை)
  • சூக்கும மந்திரம் - சிவாயநம (நுண்ணிலை )
  • அதிசூக்கும மந்திரம் - சிவாயசிவ (மிகு நுண்ணிலை)


சிவாயசிவ:

எப்படி சமய தீக்கைப் பெறாதோர் உடலில் பதினாறு இடங்களில் திருநீறு அணியக் கூடாதோ அதே போன்று சமய தீக்கைப் பெறாதோர் 'சிவாயசிவ' என்று கூறக் கூடாது.                              

"ஓசைதரும் ஐந்தெழுத்தை விதிப்படி உச்சரிக்க"

ஒரு சாதாரண மனிதன் எப்படி இறைவன் இருக்கும் கருவறைக்குள் நுழையக்கூடதோ, அதே போன்று தான் சில சிவாகம விதிகளும். உலகப் பற்றுகளை அறுத்து, இல்லறம் துறந்த சித்தர்கள், ஞானிகள் உச்சரிக்கக் கூடிய மந்திரம் தான் 'சிவாயசிவ'. எனவே நாமும் சைவநெறி நிற்றல் நலன் பயக்கும்.

நமசிவாய:

இம்மந்திரம் தான் உடலுக்குப் பயனாவது. நம் உலகியல் வாழ்விற்கு இன்பத்தை தரவல்லது. அனைவராலும் உச்சரிக்க ஏற்றது. ஒரு உயிரின் ஆசையை வளர்த்துக் கொண்டே இருக்கச் செய்கிறது. ஒரு உடலுக்கு உலக இன்பங்கள் எல்லாம் தரவல்லது 'நமசிவாய' என்னும் மந்திரம். எனவே ஓர் உயிர் நல்வினை, தீவினை என்ற இரண்டையும் செய்வதன் பயனாய் மீண்டும் மீண்டும் பிறக்க நேரிடுகிறது. எனவே, இந்நாமம் உயிருக்கு நன்மை பயப்பது அன்று.

சிவாயநம:


இந்நாமமே உயிருக்குப் பயனாவது. எப்படியெனில், பிறப்பற்ற நிலைக்கு ஒரு உயிரை கொண்டு சொல்லக் கூடியது 'சிவாயநம' என்னும் மந்திரம் ஆகும். ஒவ்வொரு சமயமும் இறைவனுடன் உயிர் கலந்து நிற்கும் பேரானந்த நிலையைத்தான் முத்தி என்று கூறுகின்றன. ஓர் உயிரின் பயணமும் பிறப்பற்ற நிலை நோக்கி செல்ல வேண்டுமானால் ' சிவாயநம' என்று ஓதுதல் வேண்டும்.

  • சி - சிவன்
  • வா - அருள்
  • - உயிர்
  • - மறைப்பாற்றல்
  • - ஆணவமலம்


ஓர் உயிர் தன்னை பின்னிறுத்திக் கொண்டு(), ஆணவத்தை புறந் தள்ளிவிட்டு(நம), இறையருள் துணையோடு (வா) சிவனை வழிபடுதலை (சி), 'சிவாயநம' என்னும் மந்திரம் உணர்த்துகிறது.

ஒவ்வொரு எழுத்திலும் ஒவ்வொரு பொருள் பதிந்துள்ளது. எனவே தான் 'நமசிவாய' என்னும் போது, ஆணவம் முந்திக் கொண்டு நிற்க (நம), அருளது துணையின்றி (வா) ஒரு உயிர் இறைவனை வழிபடும் நிலை உண்டாகிறது. தன்னை வணங்குபவருக்கு இன்பத்தைத் தரும். இறைவன் பிறப்பை வழங்கும் நிலை உண்டாகிறது.

போகின்ற பாதை சரியாக இருந்தால் தானே, நினைத்த இடத்திற்கு சென்றடைய முடியும். அது போலத் தான் இறை நாமங்களும்!

ஓம் - பிரணவத்துள் பஞ்சாட்சம்


+ + ம் = ஓம்

  • - சிவத்தையும் அருளையும் குறிக்கும் (சிவா)
  •   - உயிரைக் குறிக்கும் ()
  • ம் - ஆணவமலத்தையும் மறைப் பாற்றலையும் குறிக்கும் (நம)

ஆக, ஓம் என்னும் பிரணவப் பொருளிலும் 'சிவாய நம' என்னும் மந்திரப்பொருள் தான் உள்ளது.

எனவே ஓம் சேர்த்தும் சேர்க்காமலும் ஐந்தெழுத்தான 'சிவாயநம', 'நமசிவாய' என்னும் மந்திரங்களை ஓதலாம்.

ஓம் சிவாயநம - சிவாயநம சிவாயநம
ஓம் நமசிவாய- சிவாயநம நமசிவாய

என்று பொருளாகின்றது .

 சித்தர்கள் , ஞானிகள் போன்றோரும் 'சிவாய சிவ' என்று சொல்லவே கூடாது. ஏனெனில், மிக நுண்ணிய மந்திரமான 'சிவாய சிவ' என்பதுடன்  எம் மந்திரமும் சேர்த்தல் கூடாது.
  
ஐந்தெழுத்து ஐந்து தரும்

"சிவாய நம என்று சிந்தித்து ருப்போர்க்கு
அபாயம் ஒரு நாளும் இல்லை"

ஔவைப் பிராட்டியும், ' சிவாய நம என்று நாம் கூறும் போது எந்த துன்பங்களும் நமக்கு எந்நாளும், அதாவது இம்மை, றுமை என்ற இரண்டிலும் இல்லை என்கிறார்.

மேலும் இம்மந்திரம்,

1. நல்வாக்கு
2. இனிய பாற்சோறு
3. நல்லார் இணக்கம்
4. உயர்ந்த நற்குணம்
5. குறைவிலா செல்வம்

என்ற வாழ்வியல் பயன்களையும் அளவோடு தருகின்றது.

மந்திரவேந்து - சிவாயநம

'சிவாயநம' என்னும் நாமத்தை 'மந்திரவேந்து' என்பர். மந்திரம் என்றால் நினைப்பவனைக் காப்பது என்று பொருள். வேந்து என்றால் அரசன் என்று பொருள். எனவே மந்திரங்கள் எல்லாவற்றிலும் முதன்மையானது 'சிவாயநம' என்னும் மந்திரமே ஆகும்.

"சிவாயநம எனச்சித்தம் ஒடுக்கி
அவாயம்  அறவே அடிமையது ஆக்கிச்
சிவாய சிவசிவ என்று என்றே சிந்தை
அவாயம் கெட நிற்க ஆனந்தம் ஆமே"

திருமூலரும், சிவாயநம என்னும் மந்திரம் தான் தலையாயது என்கிறார். இப்பிறவியில் ஆன்மாவை ஒழுங்குபடுத்தி, அதற்கு அடுத்தொரு பிறவி ஏற்படாதபடி காக்கும் வல்லமை இந்நாமத்திற்கு உண்டு.

ஆக, அளவோடு கூடிய உலக இன்பமும் முடிவில் இறை இன்பம் தரக் கூடியது 'சிவாயநம' என்பதே ஆகும்.
உயர்ந்தவன், ஏழை, கற்றவன், கல்லாதவன் என அனைத்து மக்களுமே தங்கள் வாழ்வில், என்றாவது ஒரு நிமிடம் பிறப்பின் இன்னல்களை நினைத்து வெறுக்காமல் இருந்திட முடியாது.


எனவே, சாதாரண மனிதர்களாகிய நாமும், வளமான வாழ்வும் அளவற்ற இறைப்பேரானந்தமும் அடைய ஆன்மாவை வளப்படுத்தும் வல்லமை உடைய 'சிவாய நம' என்னும் மந்திரத்தை உச்சரிப்போம். உயிரை மேன்மையுறச் செய்வோம்.